×

ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

கும்மிடிப்பூண்டி: எளாவூர் சோதனைசாவடியில் ஆந்திராவில் இருந்து கோயம்புத்தூருக்கு, காரில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் ஒருங்கிணைந்த நவீன சோதனைசாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒரிசா, டெல்லி, மும்பை, பீகார், தெலுங்கானா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், சீக்கிம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து இரு வழித்தடங்களில், கனரக வாகனங்களில் காய்கறி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், காற்றாலை உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில் எளாவூர் சோதனைசாவடி வழியாக சில மாதங்களாக ஆந்திராவிலிருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற தென்மாவட்டங்களுக்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில், திருவள்ளுவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில், எளாவூர் சோதனைசாவடி பகுதிகளில் போலீசார் தீவிரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் குமணன் தலைமையில், நேற்று காலை எளாவூர் சோதனைசாவடி பகுதியில் போலீசார், வெளிமாநிலங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் குமணன், காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார், 3 வாலிபர்களை கைது செய்து, மதுவிலக்கு போதை தடுப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார்(24), சரண்(22), வசந்த(22). ஆகிய 3 பேரும், ஆந்திராவில் இருந்து காரின் மூலம் கோயம்புத்தூருக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கார் மற்றும் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நந்தகுமார், சரண், வசந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவிலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Kummidipoondi ,Coimbatore ,Elavoor ,
× RELATED ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில்...