×

மனைவியை கீழே தள்ளிவிட்டு கணவரை காரில் கடத்திய கும்பல்: வெள்ளவேடு அருகே பரபரப்பு

பூந்தமல்லி: வெள்ளவேடு அருகே வாலிபரை காரில் கடத்திய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அவரது மனைவியை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். அண்ணனுக்குப் பதில் தம்பியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. திருவள்ளூர் அடுத்த ஸ்ரீதேவி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் தாஸ்(27). இவரது மனைவி அனிதா(23). நேற்று முன்தினம் உமேஷ் தாஸ் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். நேற்று காலை பெசன்ட் நகரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான ஸ்ரீதேவி குப்பத்துக்கு அவர் காரில் வந்து கொண்டிருந்தார்.

சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளவேடு அடுத்த புதுச்சத்திரம் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மற்றும் பைக் மீது உமேஷ்தாஸின் கார் மோதி விட்டதாகக் கூறி மர்ம கும்பல் வழிமறித்தது. இதனால் உமேஷ்தாஸ் காரில் இருந்து கீழே இறங்கியபோது, உமேஷ் குமாரின் மனைவி அனிதாவை தரதரவென காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு உமேஷ்தாஸை அந்த கும்பல் அவரது காரிலேயே கடத்திச் சென்றது. இதுகுறித்து உமேஷ் தாஸின் மனைவி அனிதா, தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். வேலூரில் தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் ஆட்களை சேர்த்து விடும் வேலையில் உமேஷ் தாஸின் அண்ணன் தினேஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால் தினேஷ் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தினேஷின் காரில் அவரது தம்பியான என் கணவரும், நானும் வந்தோம். காரில் தினேஷ் வந்ததாக நினைத்து அவருக்குப் பதில் அவரது தம்பியை கடத்திச் சென்றனர் என அந்த புகாரில் அனிதா தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசார் அனிதாவிடம் கடத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மனைவியை கீழே தள்ளிவிட்டு கணவரை காரில் கடத்திய கும்பல்: வெள்ளவேடு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : zuvad ,Poonthamalli ,Valibar ,Vuvedu ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் மனைவியை தாக்கிய கணவர் கைது