×

கடலுக்குள் இருந்த பாறையில் இருந்து செல்பி… 3 குழந்தைகள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட தாய்

மும்பை: கடலுக்குள் இருந்த பாறையில் இருந்து செல்பி எடுத்த தாய், தனது 3 குழந்தைகள் மற்றும் கணவர் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா கடற்கரையில் சீற்றம் காணப்படும் போது அங்குள்ள பாறைகளை தண்ணீர் சூழ்ந்து இருக்கும். அப்பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென கடலில் நீர்மட்டம் அதிகரிப்பதுண்டு.

அதுபோன்ற நேரங்களில் தீயணைப்பு துறையினர் அல்லது லைப் கார்டுகள் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்பதுண்டு. தற்போது மழைகாலம் என்பதால் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ஜோதி சொனார் (27) என்ற பெண் தனது கணவர் முகேஷ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் பாந்த்ரா கடற்கரைக்கு சென்றார். கடற்கரையில் அவர்கள் சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அந்நேரம் ஜோதியும் அவரது கணவரும் குழந்தைகளை கடற்கரையில் விட்டுவிட்டு, கடலுக்குள் இருக்கும் பாறையில் அமர்ந்து செல்பி எடுக்கும் ஆசையில் சென்றனர். அந்நேரம் கடலில் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டதால், அவர்கள் இருவர் மீதும் பட்டுச்சென்றது. கடற்கரையில் இருந்த குழந்தைகள் பயத்தில் ‘அம்மா வாருங்கள்’ என்று கத்திக்கொண்டிருந்தனர்.

ஆனால் அவர்களால் உடனே அங்கிருந்து வரமுடியாத அளவுக்கு கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் இருந்தது. ஒரு கட்டத்தில் பாறையில் அமர்ந்து இருந்த இரண்டு பேரையும் வேகமாக வந்த ராட்சத அலை ஒன்று கடலுக்குள் இழுத்துச்சென்று விட்டது. கடற்கரையில் இருந்த குழந்தைகள் கூச்சல் போட்டனர். கடல் அலைகளில் இருந்து ஜோதியின் கணவரை மட்டுமே மீட்புக் குழுவினரால் காப்பாற்ற முடிந்தது. ஜோதியின் உடல் 20 மணி நேர தேடுதலுக்கு பிறகே மீட்கப்பட்டது. அவர்கள் கடலுக்குள் அலைகளால் இழுத்துச்செல்லப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post கடலுக்குள் இருந்த பாறையில் இருந்து செல்பி… 3 குழந்தைகள் கண்முன்னே அலையில் இழுத்து செல்லப்பட்ட தாய் appeared first on Dinakaran.

Tags : Mumbai ,
× RELATED மும்பை – சூரத் வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு