×

ரகசிய கேமராவை யூடியூப் வீடியோ உதவியுடன் கண்டுபிடித்த வாலிபர்

 

புதுச்சேரி, ஜூலை 17: புதுச்சேரி தனியார் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததால், விடுதி உரிமையாளர், மேலாளர் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி 100 அடி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் விடுதியில் உழவர்கரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் கடந்த 10ம்தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அறையில் இருந்த எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில் இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக் பாயின்ட்டில் சிவப்பு நிறத்தில் லைட் எரிவதை பார்த்துள்ளார். பிறகு வெளியே சென்று ஸ்குரூடிரைவர் வாங்கி வந்து அந்த ஸ்விட்ச் பாக்சை கழற்றி பார்த்தபோது அதில் சிறிய அளவில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனை வீடியோவாக பதிவு செய்து கேமராவை கழற்றி எடுத்துக்கொண்டு விடுதி உரிமையாளரிடம் சென்று புகார் அளித்துள்ளார். அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது அறையில் தங்குபவர்களை ஆபாசமாக படம்பிடிக்க ரகசிய கேமரா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் ஊழியர்களான புதுச்சேரி, தேங்காய்திட்டு ஆனந்த் (25), அரியாங்குப்பம் ஓடைவெளி ஆபிரகாம் (22) ஆகியோர் மீது பெண்களை ஆபாச படம்பிடித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரகசிய கேமராவில் பதிவான காட்சிகளை நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசித்து வந்தது தெரியவந்தது. இவற்றை பொருத்துவதற்கு விடுதியின் மேலாளரான புதுச்சேரி நைனார்மண்டபம், வள்ளலார் நகரில் வசிக்கும் இருதயராஜ் (69), உரிமையாளரான ரெட்டியார்பாளையம், கம்பன் நகர், 2வது குறுக்குத் தெரு இளைய ஆழ்வார் (45) ஆகியோர் உடந்தையாக இருந்தது அம்பலமானது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தியதில் விடுதி உரிமையாளரும், மேலாளரும் தங்களுக்கு தெரியாமலேயே ஊழியர்களில் யாரோ இதை பொருத்தியுள்ளனர் என கூறினர். பிறகு விடுதியின் அறைகளில் போலீசார் சோதனை செய்தபோது மேலும் 3 அறைகளில் ரகசிய கேமரா வைத்து இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கேமராவின் ஹார்டு டிஸ்கை பறிமுதல் செய்த போலீசார் இளம் ஜோடிகளின் அந்தரங்க படங்கள் உள்ளதா? என சோதனை செய்து வருகின்றனர். இதனிடையே உரிமையாளர், மேலாளர் ஆகிய இருவரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். ேமலும் தலைமறைவாக உள்ள விடுதி ஊழியர்களான ஆனந்த், ஆபிரகாம் இருவரையும் தனிப்படை வலைவீசி தேடி வருகிறது. விடுதியில் அறை எடுத்து தங்கிய வாலிபர் யூடியூப் வீடியோவை பார்த்து அதன்படி அறையில் இருந்த மின்விளக்குகளை அனைத்துவிட்டு செல்போன் கேமராவை ஓபன் செய்து அறையை சுற்றி சோதனை செய்துள்ளார்.

அப்போது செல்போன் கேமராவில் அறையின் சுவிட்ச் பாக்ஸில் ரகசியமாக கேமரா இருந்த இடத்தில் சிவப்பு நிறத்தில் லைட் எரிந்துள்ளது. இதனை வைத்து தான் அந்த வாலிபர் அறையில் ரகசிய கேமரா இருந்ததை கண்டுப்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. புதுச்சேரி நகர பகுதிகளில் உள்ள மற்ற லாட்ஜ்கள், விடுதிகள், தங்கும் ஓட்டல்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

The post ரகசிய கேமராவை யூடியூப் வீடியோ உதவியுடன் கண்டுபிடித்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Waliber ,YouTube ,Puducherry ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!