×

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக கடன் தொகை வரும் நிதியாண்டில் ரூ.3,500 கோடியாக உயர்த்த இலக்கு: 2 ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்ட நிறுவனங்கள்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக கடன் தொகை (Assets Under management) வரும் நிதியாண்டில் ரூ.3500 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுப்படுத்துவற்காகவும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது. இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடைய ஆர்.கே.சண்முகம் இந்த முதலீட்டு கழகத்தை தொடங்கி வைத்தார்.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மொத்த நிதியில் 90 சதவீதம் நிதி பங்களிப்பும், முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு மொத்த நிதியில் 40 சதவீதம் நிதி பங்களிப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வரும் இந்த கழகம் இதுவரை 1.27 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு ரூ.19,444 கோடி நிதி உதவி வழங்கி உள்ளது. இந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக கடன் தொகை ரூ.2536 கோடியாக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 23% அதிகரித்துள்ளது. 8 ஆண்டுகள் முன்னர் வரை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடந்த பிபிபி+ என்ற மதிப்பீட்டில் இருந்து வந்தது, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் தனது நிதி வலிமையை சரியான முறையில் வெளிப்படுத்தியதால் 2021-22ம் நிதியாண்டில் பிபிபி+ என்ற மதிப்பீட்டில் இருந்து ஏ- என்ற மதிப்பீட்டிற்கு உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த நிதியாண்டில் ஏ என்ற பதிப்பீட்டுக்குள் அடி எடுத்து வைத்துள்ளது. வங்கிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறைந்த விலையில் தொழில்முனைவோருக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. மேலும் உரிமையின் மொத்த செலவு என்ற திட்டம் மூலம் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் அதிக பயன்களை தருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு (சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதன் பங்குதாரர்கள்) கடன் வழங்குதல், நிதிச் சேவைகள், தொழில்நுட்ப வழிகாட்டுதல், சந்தைப்படுத்தல் உதவி, திறன் மேம்பாடு என தமிழ்நாட்டின் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிகாக இந்த சேவைகளை வழங்கி வருகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் கடந்த 2 நிதியாண்டில் 18 நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக கடன் தொகை வரும் நிதியாண்டில் ரூ.3500 கோடி உயர்த்த அக்கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்தக்கட்டமாக ரூ.5000 கோடியாக உயர்த்த அனைத்து பணிகளும் நடைப்பெற்று வருகிறது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வழி நடத்தவும் தொழில்நுட்ப வளர்சிக்கும் உறுதுணையாக உள்ளது. தமிழ்நாடு 2030ம் ஆண்டுக்கு யுஎஸ்டி 1 டிரில்லியன் பொருளாதரத்தை அடைவதற்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உதவியாக உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கொள்கை மற்றும் திட்டமிடல் ( டிஜிஎம்) அதிகாரி ரமேஷ் கூறியதாவது: இக்கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் கடந்த 2 வருடங்களாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் புதிய பரிமாணம் அடைந்து வருகிறது.

3500 கோடி இலக்கை அடைவதற்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 10 இஎஸ்ஜி சான்றிதழ் பெற்ற அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் சிறு குழு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக நிறுவனம் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான அனைத்து வகையான உதவிகளையும் ஆலோசனைகளையும் செய்வார்கள். இதனால் எந்த ஒரு நிறுவனமும் மூடப்படாது. வருங்காலத்தில் புதிய புதிய நிறுவனங்கள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இயக்குனர் ஹன்ஸ் ராஜ் வர்மா தலைமையில் பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அது மட்டுமின்றி கார்பன் வரி குறைக்க பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இது குறைப்பதற்காக ஆலோசனை மற்றும் நிதி உதவி வழங்க இருக்கிறோம். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்கும். இதனால் தொழில் முனைவோர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

* தொழில்முனைவோர் மேம்பாடு மையம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சி – மாநிலத்தில் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக.

* தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கம் – குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக.

* இந்திய தொழில்களின் கூட்டமைப்பு மற்றும் இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்களின் சமூகம் – 5 இடங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்க.

* தமிழ்நாடு சிறு தொழில்கள் வளர்ச்சிக் கழகம் – இடைக்கால கடன் வழங்குவதற்காக.

* தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி- குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கு பணி மூலதனம் வழங்குவதற்காக.

* திட்ட மேலாண்மை சங்கம் – தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அதிகாரிகளுக்கு திறன் அதிகரிப்பதற்காக.

* எஸ் ஆர் எம் கல்லூரி – நிறுவனங்கள் தொடங்க நிதி உதவி வழங்குவதற்காக.

* தேசிய சிறு தொழில் கழகம் – குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கு நிதி வழங்குவதற்காக.

* சிஓடிஐஎஸ்எஸ்ஐஏ (CODISSIA) மையம் – நிறுவனங்கள் தொடங்க நிதி உதவி வழங்குவதற்காக.

* பிஎச்இஎல் நிறுவனம் – ஆயுதம் ஏந்திய வாகனங்கள் உருவாக்குவதற்காக.

* மயிட் கஃபே (mind cafe) – மயிட் கஃபே-காக இடத்தை உருவாக்குவதற்காக

* சென்னை மாநகராட்சி – ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி மேற்கொள்ள உதவியாக இருப்பதற்காக

* சென்னை குடிநீர் வழங்கத்துறை – ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி மேற்கொள்ள உதவியாக இருப்பதற்காக.

* பரோடா வங்கி – அடிப்படை மூலதன தேவைக்காக.

* விஐடி – குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக.

* சிலிக்கான் – பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக.

* ஆப்பிரிக்கா இந்தியாவின் பொருளாதார அடிப்படை நிறுவனம் (AIEF) – இந்திய நிறுவனம் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதற்காக.

* ஏவிஎன்எல் – பாதுகாப்பு சார்பில் உற்பத்தி செய்ய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக.

The post தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக கடன் தொகை வரும் நிதியாண்டில் ரூ.3,500 கோடியாக உயர்த்த இலக்கு: 2 ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்ட நிறுவனங்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Business Investment Corporation ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...