×

இசிஆரில் அதிகாலை சோகம் அதிவேகமாக வந்த கார் மோதி 4 பெண்கள் பலி: சென்னை டிரைவர் கைது

காலாப்பட்டு: இசிஆரில் அதிகாலை தறிகெட்டு ஓடிய கார் மோதி 4 பெண்கள் பலியாகினர். இதுதொடர்பாக சென்னை டிரைவர் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே புதுக்குப்பம் மீனவ பெண்கள் தினமும் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு சென்று மீன்கள் வாங்கி வந்து காலாப்பட்டு, கீழ்புத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விற்று வருகின்றனர். நேற்று காலை புதுக்குப்பம் மீனவர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50), நாயகம் (50), கோமளம் (52), கெங்கையம்மாள் (53), பிரேமா (45) ஆகிய 6 பேரும், புதுக்குப்பம் இசிஆர் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்து நின்றனர். அப்போது அதிகாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்னை தனியார் கல்லூரியில் எம்பிஏ படிக்கும் ஆலந்துரை சேர்ந்த விக்னேஸ்வரன் (22) என்பவர் தனது நண்பர்களான கவுதம், சேது, பிரசாந்த், திவ்யா ஆகியோருடன் அதிவேகமாக காரில் சென்றுள்ளார்.

கீழ்ப்புத்துப்பட்டு அருகே வந்தபோது, குறுக்கே வேறொரு வாகனம் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் பேருந்துக்கு காத்திருந்த 6 பெண்கள் மீதும் மோதியது. பின்னர் தாறுமாறாக ஓடிய கார், அருகே உள்ள அலமேலு என்பவரின் குடிசை வீட்டிற்குள் புகுந்து நின்றது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்து உயிர் தப்பினர். இதில் வீடு கடுமையாக சேதமடைந்தது. கார் மோதியதில் லட்சுமி (45), கோவிந்தம்மாள் (50) ஆகிய இருவரும் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பெண்களையும் மீட்டு, புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கெங்கையம்மாள் (53), நாயகம்(50) ஆகியோர் இறந்தனர். மற்ற 2 பேரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து காரை ஓட்டி வந்த விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

The post இசிஆரில் அதிகாலை சோகம் அதிவேகமாக வந்த கார் மோதி 4 பெண்கள் பலி: சென்னை டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : ECR ,Chennai ,Kalapattu ,Dinakaran ,
× RELATED தூண்டில் வளைவு அமைக்கக்கோரி...