சிவகாசி: சிவகாசி மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைபடுகிறது. தற்போது வெம்பக்கோட்டை அணை, மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக போக்க ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் கிணறுகள் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில் வழியாக குழாய்கள் பதித்து சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் எடுத்து வரப்படுகிறது. இதற்காக சங்கரன்கோவிலில் தரை மட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்கபட்டுள்ளது.
பழவூரில் இருந்து தாமிரபரணி நீர் குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு இங்கு தேக்கி வைக்கப்படும். இங்கிருந்து புளியங்குடி, சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளுக்கு தனியாக குழாய் பதித்து தாமிரபரணி நீர் கொண்டு வரப்படுகிறது. சிவகாசி மாநகராட்சியில் தற்போது தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் வழங்கும் பணி துவங்க பட்டுள்ளது. இதற்காக சிவகாசி அம்பேத்கர் சிலையி்ன் பின்புறம் 4 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 3 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி முடிக்க பட்டுள்ளது.
இந்த நீர்த்தேக்க தொட்டிகளில் தாமிரபரணி நீர் தேக்கி பொதுமக்களுக்கு விநியோகிக்கபடுகிறது. சிவகாசி மாநகராட்சி பகுதியில் மெயின் குழாயில் இருந்து வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் வழங்க இணைப்பு குழாய் பதிக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு சோதனை ஓட்டம் செய்யப்பட்டு வருகிறது. இதில் எங்கு எங்கு உடைப்பு ஏற்படுகிறது, எங்கு குடிநீர் செல்லாமல் தடை ஏற்படுகிறது என சோதனை நடத்த பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் மட்டுமே குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடியது.
இதுபோன்று உடைப்பு உள்ள இடங்களில் அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் தாமிரபரணி திட்டத்தில் மாநகராட்சி பகுதியல் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சிவகாசி மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி குடிநீர் திட்ட பணி தீவிரம் appeared first on Dinakaran.