×

2 மகன்களை கொன்று தாய் தற்கொலை

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குடும்ப தகராறில் 2 மகன்களை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த வெட்டுக்காட்டுப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி சசிகலா(26). இவர்களுக்கு திவித்(5), தர்ஷன்(3) என இரு மகன்கள். இந்தநிலையில், தனசேகரனுக்கும் சசிகலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் நேற்றிரவும் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சசிகலா மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் திவித், தர்ஷன் ஆகியோருடன் சசிகலா வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அப்பகுதியை சேர்ந்த மக்களின் உதவியுடன் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை சுமார் 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சசிகலாவின் செருப்பு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்து கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது அங்கு திவித், தர்ஷன் ஆகியோர் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் கிணற்றில் சடலமாக மிதந்த இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர்.

இதனைதொடர்ந்து சசிகலாவையும் கிணற்றினுள் தேடினர். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடலும் மீட்கப்பட்டது. சசிகலா, திவித், தர்ஷன் ஆகியோரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறில், திவித், தர்ஷன் ஆகியோரை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, சசிகலா கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : NAMACKAL ,Paramathivelur ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்