×

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை மிரட்டி 64 பவுன் 30 லட்சம் ரூபாய் மோசடி: வாலிபர் கைது

ஆவடி: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம் (40). இவரும் ஆவடி, காமராஜர் நகர், விஜிஎன் குடியிருப்பை சேர்ந்த சதீஷ்குமார் (40) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, மும்தாஜ் பேகத்துடன் பலமுறை சதீஷ்குமார் ஜாலியாக ஊர் சுற்றி வந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மும்தாஜ் பேகத்திடம் அடிக்கடி சதீஷ்குமார் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, கோயம்பேட்டில் தனக்கு சொந்தமான வீட்டை விற்று, சதீஷ்குமாரிடம் ₹30 லட்சத்தை மும்தாஜ் பேகம் கொடுத்திருக்கிறார். மேலும், தனது தங்கையின் திருமணத்துக்கு பெற்ற கடனுக்காக, மும்தாஜ் பேகத்திடம் 64 சவரன் நகைகளை சதீஷ்குமார் வாங்கியுள்ளார்.

பின்னர், மும்தாஜ் பேகத்தை திருமணம் செய்து கொள்ள முடியாது என சதீஷ்குமார் அடித்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தன்னுடன் மும்தாஜ் பேகம் ஒன்றாக இருந்த வீடியோ படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்தாஜ் பேகம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று மாலை சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்தனர். அவர் ₹30 லட்சம் மற்றும் 64 சவரன் நகைகளை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சதீஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை மிரட்டி 64 பவுன் 30 லட்சம் ரூபாய் மோசடி: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Wolliber ,Awadi ,Mumtaj Begum ,Maduravayal ,Sadeeshkumar ,Kamarajar Nagar ,VGN ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!