×

புழலில் கழிவுநீர் இறைக்கும் நேரத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

புழல்: புழல் 32வது வார்டு பகுதியில் இயங்கி வரும் கழிவுநீர் இறைக்கும் நிலையத்தில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். அங்கு சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். மாதவரம் மண்டலம், புழல் 32வது வார்டான புத்தாகரம் பகுதியில், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையின் அருகே சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் கழிவுநீர் இறைக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு புழல், காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், கதிர்வேடு, லட்சுமிபுரம், ரெட்டேரி, விநாயகபுரம், புத்தாகரம், சூரப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை தனியார் லாரிகளில் கொண்டுவந்து இறக்கிவிட்டு செல்கின்றனர்.

இப்பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெற்று வருகிறது. இதனால் சர்வீஸ் சாலையோரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த சர்வீஸ் சாலையோரத்தில் தனியார் லாரிகளில் இருந்து கழிவுநீர் இறக்கப்படுவதால், அங்கு பல்வேறு இடங்களில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி வழியே செல்லும் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே, புத்தாகரம் பகுதியில் இயங்கி வரும் கழிவுநீர் இறைக்கும் நிலையத்தில் மீண்டும் பழையபடி காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை கழிவுநீரை இறைப்பதற்கான நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். அதேபோல், சர்வீஸ் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, அங்கு சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post புழலில் கழிவுநீர் இறைக்கும் நேரத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Puzhal 32nd ,Bujal ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...