கரூர், ஜூலை 15: கரூர் தீயணைப்புத்துறையினர் சார்பில் பெரியகுளத்துப்பாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுதும் 2023ம் ஆண்டு ஜூன் 24ம்தேதி முதல் 2024ம் ஆண்டு ஜூன் 24ம்தேதி வரை ஒரு ஆண்டு காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 100 இடங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் இதுநாள் வரை தீயணைப்புத்துறையினர் சார்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் உத்தரவின்படி, மாவட்ட உதவி அலுவலர் திருமுருகன் தலைமையில் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு இந்த தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும் இடங்களுக்கு ஏற்ப தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தப்பித்துக் கொள்வது, மழை, வெள்ளம், புயல் போன்ற சமயங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது என்பன போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் முன்னியலையில் செய்து காட்டினர்.
The post கலைஞரின் நூற்றாண்டு விழா தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.