×

மது குடிக்க பணம் இல்லாததால் அயர்னிங் கடைகளை குறிவைத்து 38 இஸ்திரி பெட்டிகள் திருட்டு: பிரபல கொள்ளையன், கூட்டாளியுடன் கைது

சென்னை: மதுகுடிக்க பணம் இல்லாததால் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம் என பல இடங்களில் அயர்னிங் கடைகளை குறிவைத்து இஸ்திரி பெட்டிகளை திருடி வந்த பிரபல கொள்ளையனை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 38 இஸ்திரிபெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவல்லிக்கேணி அப்பாவு தெருவை சேர்ந்தவர் ராசு (55). இவர், வீட்டின் அருகே தள்ளுவண்டியில் அயர்னிங் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் கடந்த 6ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு, மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த போது, தள்ளுவண்டியில் வைத்திருந்த இஸ்திரி பெட்டி மற்றும் ரூ.6 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ராசு புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் அப்பாவு தெருவில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்திய போது, தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த பிரபல இஸ்திரிபெட்டி திருடன் அஜயன் (43) என தெரியவந்தது.

இவன் மீது 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை தொடர்ந்து போலீசார் அஜயனை பிடித்து விசாரணை நடத்திய போது, மதுகுடிக்க பணம் இல்லாததால், தனது நண்பரான எர்ணாவூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (49) என்பவருடன் சேர்ந்து, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அபிராமபுரம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம் பகுதிகளில் பைக்குகளில் சென்று சாலையோரம் உள்ள அயர்னிங் கடைகளின் பூட்டை உடைத்து இஸ்திரி பெட்டிகளை திருடி வந்தது தெரியவந்தது. திருடிய இஸ்திரி பெட்டிகளை, புதிதாக இஸ்திரி பெட்டி தயாரிக்கும் கடையில் விற்பனை செய்து, அதில் வரும் பணத்தை இருவரும் மது குடித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து அஜயன் மற்றும் அவரது நண்பர் ராமச்சந்திரனை கைது ெசய்தனர். திருட்டு இஸ்திரி பெட்டிகளை வாங்கிய ராஜாவிடம் இருந்து 38 இஸ்திரி பெட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகளிடம் ரூ.12 ஆயிரம் ரெக்கம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய பைக் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

The post மது குடிக்க பணம் இல்லாததால் அயர்னிங் கடைகளை குறிவைத்து 38 இஸ்திரி பெட்டிகள் திருட்டு: பிரபல கொள்ளையன், கூட்டாளியுடன் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallikeni ,Nungambakkam ,
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு