டெல்லி: சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் இந்தியா பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். சந்திரயான்-3 விண்கலம் 16 நிமிடத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. LVM 3 M4 ராக்கெட் புவியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
நிலவுக்கு விண்கலத்தை ஏவும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது என்றும் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சந்திராயன் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இந்த நாள் முக்கியமானது. தற்சார்பு இந்தியா திட்டத்தில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் 3 மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது; இந்தியாவே பெருமைப்படுகிறது. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துக்கள் என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
The post சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதன் மூலம் இந்தியா பெருமை கொள்ள வேண்டிய தருணம் இது: ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வாழ்த்து appeared first on Dinakaran.