×

திருமயம் மலைக்கோட்டையில் கற்கால மனிதர்களின் வாழ்விடம் கண்டுபிடிப்பு

திருமயம் : புதுக்கோட்டை அருகே திருமயம் மலைக்கோட்டையில் கற்கால மனிதர்களின் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மலைகளிலும், குன்றுகளிலும் இயற்கையாக அமைந்த குடைவரைகள், குகைகள் ஆகியவை கற்கால, ஆதிகால மனிதனின் வாழ்விடங்களாக இருந்தன. இத்தகைய குகைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, அம்மா சத்திரம், குடுமியான்மலை, தேனிமலை, சித்தன்னவாசல் போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன.

தற்போது திருமயத்தில் உள்ள குன்றில் இதுபோன்ற குகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியரும், புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவருமான டாக்டர் ஜெ.ராஜா முகமது, மத்திய தொல்லியல் துறை உதவி அலுவலர் முத்துக்குமார், தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கருணாகரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று கள ஆய்வு செய்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: திருமயம் குன்றின் தெற்கு சரிவில் பெரிதும், சிறிதுமாக தொடர்ச்சியாக நான்கு குகைகள் இருப்பதை கண்டறிந்தோம். இக்குகைகளில் கற்கால மனிதர்களின் வாழ்விடமாக பயன்பாட்டில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மேற்கு திசையிலிருந்து முதலில் காணப்படும் குகை, சிவபெருமான் குடைவரை கோவிலுக்குரிய தீர்த்தக் குளத்தை ஒட்டி இருக்கிறது. முகப்பிலிருந்து உள் பகுதி வரை சுமார் பத்து அடி உயரத்துக்கு மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது. வாயில் மட்டும் சிறிய திறப்பாக காணப்படுகிறது. இதுபோன்ற குகைகளில் மழை நீர் உள்ளே வராமல் இருக்க மேல் முகட்டில் பள்ளமாக (தாறை) வெட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற அமைப்பு இங்கும் காணப்படுகிறது. இதே அமைப்பு கொண்ட குகை புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டியில் காணப்படுகிறது.

இரண்டாவதாக உள்ள சிறிய குகை தரைமட்டத்திலிருந்து சுமார் ஐந்து அடி உயரத்தில் உள்ளது. இக்குகையில் சிலர் அமரலாம். குகையின் கூரைப்பகுதியில் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. சிவப்பு வண்ணத்தில் உள்ள இந்த ஓவியங்கள் சிவப்புக் காவிக்கல் கரைசல் கொண்டு வரையப்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஓவியங்கள் அழிந்தும், சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றன. ஆனால் மனித உருவங்கள் சிலவும் மனித கை அச்சு (பிரதி) ஓவியங்கள் சிலவும் நல்ல நிலையில் உள்ளன. இது போன்ற கை அச்சு பிரதியானது ஓவியத்தொகுதியை எழுதியவரின் கையாக இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.

மூன்றாவதாக உள்ள குகை சற்று உயரத்தில் உள்ளது. அளவில் பெரிதாக உள்ள இந்த குகையின் வாயிலின் முன்பக்கம் முழுவதும் சுவர் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி பரப்பும் அகலமாக உள்ளது. நான்காவதாக உள்ள சிறிய குகையும் உயரத்தில் உள்ளது. இதன் வாயிலும் சுவரால் மறைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் மூடி மறைக்கப்பட்டுவிட்டதால் இவை மக்களின் பார்வையில் படாமலேயே இருந்துள்ளது. மேலும் இங்கு இதுபோன்ற குகைகள் இருக்கும் செய்தியும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கை அச்சு ஓவியங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேசியா போன்ற நாடுகளில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் செத்தவரை பாறை ஓவியத் தொகுதியிலும், திருமயத்திலேயே மற்றொரு இடத்திலும் காணப்படும் பாறை ஓவியத்தொகுதியிலும் இதுபோன்ற கை அச்சு ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற குகைகளின் எச்சங்களை கண்டறியவும், குன்றின் வடக்கு பகுதியில் உள்ள உயரமான பாறைகளில், வரலாற்று தடயங்களை கண்டறியவும், மூடப்பட்டுள்ள குகைகளை ஆய்வு செய்யும் பணிகளை நாங்கள் தொடர்ந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post திருமயம் மலைக்கோட்டையில் கற்கால மனிதர்களின் வாழ்விடம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Thrimaiam ,Pudukkota ,Thrimam ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர்...