சென்னை: மதுரவாயல் கிருஷ்ணாநகர் 15வது தெருவில் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான நடிகர் ராஜ்கமல், நடிகை லதா ராவ் ஆகியோருக்கு சொந்தமான சூட்டிங் பங்களா உள்ளது. கடந்த 9ம் தேதி இந்த பங்களா வீட்டில் ரூ.1 லட்சம் மதிப்பிலான டிவி, மின் மோட்டார் திருடு போனது. அதேபோல் பக்கத்து வீடான பாஜ பிரமுகர் பொன்.பிரபாகர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த கார் திருடு போனது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், கொண்டிதோப்பு பகுதியை சேர்ந்த காஜா மெய்தீன் (38), திருவொற்றியூரை சேர்ந்த அமீன் உதீன் (32) ஆகிய இருவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இருவரிடமிருந்து டிவி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், இருவரையும் சிறையில் அடைத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: நடிகையின் பங்களா வீடு என்பதால் அதிக அளவில் பொருட்கள் இருக்கும் என நினைத்து திருட சென்றோம். ஆனால், வீட்டிற்குள் டிவி மட்டுமே இருந்தது. பெரிய அளவிலான டிவியை திருடிக் கொண்டு வெளியே வந்தபோது அதனை எடுத்து செல்ல வாகனம் இல்லாததால், பக்கத்து வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் திருடி, அதில் தப்பிச் சென்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post மதுரவாயல் பகுதியில் சின்னத்திரை நடிகை, பாஜ பிரமுகர் வீடுகளில் திருடிய 2 பேர் சிக்கினர்: கார் பறிமுதல் appeared first on Dinakaran.