×

இரு வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் ஜெர்மனில் தமிழக வெல்டர் கொலை: உடலை கொண்டுவர கலெக்டரிடம் மனு

சென்னை: ஜெர்மன் நாட்டில் கொலை செய்யப்பட்ட சதுரங்கப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வெல்டரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க இறந்தவரின் மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் மெய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). வெல்டரான இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும் 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், இவர் கடந்தாண்டு அனுபுரத்தை சேர்ந்த மகேஷ்பாபு என்ற ஏஜென்ட் மூலம் வெல்டர் வேலைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வெல்டர் வேலை கொடுக்காமல், கேபிள் இழுக்கும் வேலைகள் உட்பட அவருக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளை வாங்கியதால் அவர் ஹங்கேரியிலிருந்து ஜெர்மனி நாட்டுக்கு சென்று வேறு கம்பெனியில் வெல்டர் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும், அங்குள்ள ஒரு அறையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுமார் 15 பேருடன் தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி பிரகாஷ், தான் தங்கியிருந்த அறையிலேயே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து போனதாக 28ம் தேதி அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், இறந்துப் போன பிரகாஷின் உடல் இன்று வருமா, நாளை வருமா என்று ஒவ்வொரு நாளும் காத்திருந்தனர். நாட்கள் பல கடந்தும் பிரகாஷின் உடல் சொந்த ஊருக்கு வராததால் குடும்பத்தினர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், பிரகாஷின் உடலை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறும், எதனால், யாரால் கொலை செய்யப்பட்டார், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என்பதை அரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். எனினும் 15 நாட்கள் கடந்த நிலையிலும், இது வரை இறந்தவரின் உடல் ஊருக்கு வராததால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

The post இரு வாரங்களுக்கு முன்பு மர்மமான முறையில் ஜெர்மனில் தமிழக வெல்டர் கொலை: உடலை கொண்டுவர கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Germany ,Chennai ,Chaturangapatnam ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...