×

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, டாக்டர் வீடுகளில் நகை, பைக் திருட்டு 3 இடங்களில் திருட்டு முயற்சி வேலூர் சத்துவாச்சாரியில் அடுத்தடுத்து கைவரிசை

வேலூர், ஜூலை 14: வேலூர் சத்துவாச்சாரியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, டாக்டர் ஆகியோரின் 2 வீடுகளில் நள்ளிரவில் புகுந்த மர்ம ஆசாமிகள் நகை மற்றும் பைக்கை திருடிச்சென்றுள்ளனர். 3 வீடுகளில் திருட முயன்றுள்ளனர். வேலூர் அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி குப்பன். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருசக்கர வாகனத்தை வெளியே நிறுத்தியிருந்தார். நேற்று காலை பார்த்தபோது, இருசக்கர வாகனம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அதேபோல், இந்திரா நகரை சேர்ந்த வட்சன் என்பவரின் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 1 சவரன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. மேலும் சத்துவாச்சாரி பேங்க் நகரை சேர்ந்தவர் மோகனபிரியா, தேன்மொழி, டாக்டர் மிதுன் ஆகியோர் வீடுகளிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து திருட்டு நடந்த வீடுகள், திருட்டு முயற்சி நடந்த வீடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். வேலூரில் அதிக குடியிருப்புகள் கொண்ட இடங்களில் நள்ளிரவில் திருட்டு மற்றும் திருட்டு முயற்சி சம்பவத்தையறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், பைக், நகை திருட்டு தொடர்பாக குப்பன், வட்சன் ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, டாக்டர் வீடுகளில் நகை, பைக் திருட்டு 3 இடங்களில் திருட்டு முயற்சி வேலூர் சத்துவாச்சாரியில் அடுத்தடுத்து கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Vellore Satavachari ,Vellore ,Vellore Chatuvachari ,Vellore Satuvachari ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...