×

ரூ.1559.25 கோடி மதிப்பில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.1559.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1,559 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது பிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரிசியன், வெல்டர், ஏசி மெக்கானிக் போன்ற 78 தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெறவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை ரூ.2877.43 கோடி செலவில் தொழில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிட்டது.

அதன்படி, 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்கள் உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கடந்த ஜூன் 14ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஒரகடத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை திறந்து வைத்தார். டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையிலான 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 87.5 : 12.5 என்ற விகிதத்தில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனமும், தமிழ்நாடு அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, 2ம் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் – பெரும்பாக்கம், வேலூர், வாணியம்பாடி, கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், ஓசூர், நாகர்கோவில், திருச்செந்தூர், நாகலாபுரம், வேப்பலோடை, ராதாபுரம், புதுக்கோட்டை, விராலிமலை , அரியலூர், ஆண்டிமடம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, நாகப்பட்டினம், செம்போடை, திருக்குவளை, நீடாமங்கலம், கோட்டூர், கிண்டி, வடசென்னை, அம்பத்தூர், தென்காசி, கடையநல்லூர், தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, சிவகங்கை, காரைக்குடி, மேட்டூர் அணை, கருமந்துரை, திருவண்ணாமலை, ஜமுனாமரத்தூர், கோபிசெட்டிபாளையம், தருமபுரி, பெரம்பலூர், ஆலத்தூர், நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், ஆகிய 45 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 1,559 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்களை தமிழ்நாடு முதல்வர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து, அமைச்சர்கள் பெரியகருப்பன், கீதா ஜீவன், சி.வி. கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கடந்த ஜூன் 14ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

The post ரூ.1559.25 கோடி மதிப்பில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Industry ,4.0 Technology Centers ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Industry 4.0 ,Tamil Nadu ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...