×

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டில் குடியேறுகிறார் ராகுல்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டில் ராகுல் காந்தி குடியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதால் எம்பி பதவிைய இழந்த ராகுல்காந்தி 2009ம் ஆண்டு முதல் வசித்து வந்த துக்ளக் லேன் பகுதி அரசு வீட்டை ஏப்ரல் மாதம் காலி செய்தார். தற்போது அவரது தாயார் சோனியா வசித்து வரும் 10, ஜன்பத் வீட்டில் வசித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் அதற்கு ராகுல் தயாராகி வருகிறார். எனவே சோனியா இல்லத்தில் இருந்து வெளியேறி தனி வீட்டிற்கு செல்ல அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக கிழக்கு நிஜாமுதீன் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டில் ராகுல் குடியேற முடிவு செய்து இருக்கிறார். இந்த வீட்டில் ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித் வசித்து வந்தார். ராகுல் குடியேற வசதியாக அவர் அதே பகுதியில் உள்ள அவரது அத்தை வீட்டிற்கு சென்று விட்டார். ராகுல் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த வீட்டை ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் மிகவிரைவில் ராகுல் அந்த வீட்டில் குடியேறுவார்.

* உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரம் அப்பீல்
2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், தண்டனைக்கு தடை விதிக்க கேட்டும் ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வாரமே அப்பீல் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ளது. இதை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், ராகுல்காந்தி வக்கீலுமான அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ ராகுல் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு மிக விரைவில் தாக்கல் செய்யப்படும். இதுதொடர்பான மனு தயாராகி வருகிறது. விரைவில் நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள்’ என்று அவர் கூறினார். இதற்கிடையே இந்த வழக்கில் பா.ஜ எம்எல்ஏ பூர்ணேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

The post டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் வீட்டில் குடியேறுகிறார் ராகுல் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Delhi ,Chief Minister ,Sheila Dixit ,New Delhi ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED தேவகவுடா பேரன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ...