×

தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 90 பேருக்கு ரூ.5.97 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 90 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.97 கோடிக்கான உயரிய ஊக்கத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் எஸ்டிஏடி சார்பில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 90 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரம் வழங்கிடும் அடையாளமாக 9 பேருக்கு உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

2022 செஸ் தொடரில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சார்ந்த ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ.3 லட்சம், ஸ்பெயினில் நடந்த BWF ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சென்னையை சார்ந்த சங்கர் முத்துசாமிக்கு ரூ.4 லட்சம், 57வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஆந்திரா) பதக்கம் வென்ற 21 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.79 லட்சம், 2021-2022ல் நடந்த சப்-ஜுனியர், ஜுனியர் மற்றும் சீனியர் தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 56 பேருக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம், டோக்கியோவில் நடந்த BWF பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மூவருக்கு ரூ.2 கோடியே 55 லட்சம், டெல்லியில் நடந்த கான்டிடெனன்டல் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 3 பேருக்கு ரூ.15 லட்சம்,

கோலாலம்பூரில் நடந்த 20வது ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் ஆண்கள் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேலன் செந்தில்குமார், சவுரவ் கோசல் இருவருக்கும் தலா ரூ.10 லட்சம், பெண்கள் குழுப்போட்டியில் வெண்கலம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா, அபராஜிதா பாலமுருகனுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலைகளை 90 பேருக்கு உயரிய ஊக்கத்தொகையாக வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் நேற்றையதினம் 9 பேருக்கு காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

The post தேசிய, சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற 90 பேருக்கு ரூ.5.97 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...