×

டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை : அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்

சென்னை: டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என மதுவிலக்கு, ஆயத்தீர்வு துறை அமைச்சர் முத்துசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை, தலைமைச்செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி நேற்று அளித்த பேட்டி: டாஸ்மாக் தொடர்பாக நான் கொடுத்த பேட்டியில் தமக்கு சாதகமான பகுதியை மட்டும் சிலர் எடுத்து வைத்துக்கொண்டு கருத்து தெரிவிக்கின்றனர். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் எண்ணமே அரசுக்கு இல்லை என்பதை திட்டவட்டமாக சொல்லி கொள்கிறேன். டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில் தவறான இடங்களில் சென்று யாரும் மதுவை வாங்க கூடாது என்ற அர்த்தத்தில்தான் நான் கருத்து கூறியிருந்தேன். டெட்ரா பேக்கில் மதுவை விற்பனை செய்வது குறித்து சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே பெரும்பாலானோர் சொல்லும் கருத்தின் அடிப்படையிலேயே டெட்ரா பேக் மது விற்பனை குறித்து முடிவு செய்யப்படும். 180 மிலி அளவுள்ள மதுபாட்டில்களை வாங்கும் நபர்களில் 40 சதவீத நபர்கள் அதை மற்றொரு நபருடன் பகிர்ந்து அருந்துவதற்காக அரைமணி நேரம் வரை காத்திருக்கின்றனர் என்பது நாங்கள் எடுத்த கணக்கெப்பில் தெரியவந்துள்ளது. மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதை குறைத்து விட்டோம். சில இடங்களில் அவ்வாறு வாங்கப்படுவதை பெரிதுபடுத்தியுள்ளனர். கூடுதலாக வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஞாயிற்றுகிழமைகளில் தனி வாகனத்தில் டாஸ்மாக் கடை அருகே மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு படங்கள் ஒளிபரப்பப்படும்.

The post டாஸ்மாக் கடை நேரத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை : அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Govt ,Tasmac ,Minister ,Muthuswamy ,Chennai ,Muthusamy ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?