×

பஸ்சின் பின்புறம் தட்டியதை கேட்டதால் மாணவன் கொலை மிரட்டல் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர் சாலை மறியல்

கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் சிலர், நேற்று மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தடம் எண் 477 அரசு பஸ்சில் ஏறினர். இதில் சில மாணவர்கள் பஸ்சின் பின்புறம் தட்டியதாக கூறப்படுகிறது. இதை கண்டக்டர் மற்றும் டிரைவர் கேட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆத்திரமடைந்த பிளஸ் 2 மாணவன் ஒருவன், ‘எங்கள் ஊர் வழியாக தானே செல்ல வேண்டும். வெட்டி கொன்று விடுவேன்’ என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பஸ்சை நடுவழியில் நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டிரைவர், கண்டக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை ஏற்று மறியலை கைவிட்டு பஸ்சை ஓட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பஸ்சின் பின்புறம் தட்டியதை கேட்டதால் மாணவன் கொலை மிரட்டல் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Nadurote ,Galasapapakam ,Thiruvannamalai District ,Kanchi ,Newpiam Union ,Galasabhapakam ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...