×

குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்த 750 போதை மாத்திரை பறிமுதல்: தேனியை சேர்ந்த 3 பேர் கைது

தாம்பரம்: குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்த 750 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குரோம்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 750 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 3 பேரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜா (27), ஜெகதீஷ் (25), கார்த்திக் (27) என்பது தெரியவந்தது.

மேலும் தேனி மாவட்டத்தில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கும் போதை மாத்திரை விற்பனை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்த 750 போதை மாத்திரை பறிமுதல்: தேனியை சேர்ந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Crompet ,Pallavaram ,Theni ,Tambaram ,Chromepet ,Chrompet, Pallavaram ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்