×

புதுகையில் பயங்கரம் கழுத்தறுத்து இன்ஜினியர் கொலை: பக்கத்து வீட்டு டிரைவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை இன்ஜினியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை நரிமேடு லட்சுமி நகரை சேர்ந்தவர் பிச்சை. ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மகன் விஜயராகவன் (48). இன்ஜினியர். சென்னையில் வேலை பார்த்து வந்தார். பின்னர் வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். இவருக்கு, கடந்த 2004ம் ஆண்டு சுவாதி என்பவருடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆனது. இதன்பின் 2வதாக வைஷ்ணவியை விஜயராகவன் 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். அவரும் விஜயராகவனை பிரிந்து சென்றார். தந்தை பிச்சை சென்னையில் வசித்து வருகிறார். 2 மனைவிகளும் பிரிந்து சென்ற நிலையில், கடந்த 3 ஆண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்த விஜயராகவன், புதுக்கோட்டை வீட்டில் தனியாக வசித்து வந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு வீட்டின் அருகே ஓட்டலில் சாப்பிட்டு வந்தார். இதற்கான தொகையை தந்தை பிச்சை செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் விஜயராகவன் நேற்று மாலை அவரது வீட்டில் இருந்து 100 அடி தூரத்தில் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கழுத்து மற்றும் வயிற்றில் வெட்டுக்காயம் இருந்தது. எஸ்பி வந்திதா பாண்டே, திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிஎஸ்பி ராகவி தலைமையிலான தனிப்படையினர் கொலையாளியை தேடி வந்தனர்.விசாரணையில், விஜயராகவன் பக்கத்து வீட்டை சேர்ந்த கார் டிரைவர் சோமசுந்தரத்துடன் (60) தினமும் மது குடிப்பாராம். நேற்று மாலையும் இருவரும் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளனர்.

பின்னர் சோமசுந்தரம் தனது பைக்கில் விஜயராகவனை வீட்டுக்கு அழைத்து வந்தபோது, தனது பணத்தை எல்லாம் பறித்து ஏமாற்றி விட்டதாக கூறி விஜயராகவன், சோமசுந்தரத்தை திட்டியுள்ளார். தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சோமசுந்தரம், வீட்டருகே வந்தபோது விஜயராகவனை பைக்கிலிருந்து இறக்கி விட்டு, பின்னர் வீட்டுக்கு வந்து கத்தியை எடுத்து சென்று விஜயராகவனின் கழுத்தை அறுத்ததுடன், வயிற்றிலும் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிந்து சோமசுந்தரத்தை நேற்றிரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுகையில் பயங்கரம் கழுத்தறுத்து இன்ஜினியர் கொலை: பக்கத்து வீட்டு டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pudugai ,Pudukottai ,Narimedu ,Lakshmi ,
× RELATED புதிதாக வரும் நவீன தொழில் நுட்பத்தால்...