×

பிறந்தநாளையொட்டி அழகு முத்துக்கோன் படத்துக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை: கட்சி தலைவர்களும் மலர்தூவினர்

சென்னை: சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அனைத்து அரசியல் கட்சி சார்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், ரகுபதி, மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் பரந்தாமன், தாயகம் கவி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிலைக்கு மாலை அணிவித்ததோடு, உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.

அப்போது அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். மேலும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். இதேபோல அழகு முத்துக்கோன் சிலைக்கு மதிமுக பொது செயலாளர் வைகோ மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார். பாஜ சார்பில் மாநில தலைவர் கே.அண்ணாமலை மாலை அணிவித்தார். கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் யாதவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் எம்.வி.சேகர் வரவேற்றார். காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் எம்பி, பாமக சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர் நாசே.ஜெ.ராமச்சந்திரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் வேலு மனோகரன், மாநில பொருளாளர் கே.எத்திராஜ், மூத்த துனை தலைவர்கள் ஏ.எம்.செல்வராஜ், மலேசியா பாண்டியன், பா.போஸ், எம்.ஆர்.பன்னீர் செல்வம், சுப்பிரமணியன், ராஜகோபால், வேளச்சேரி ஏ.எஸ்.பழனி யாதவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சார்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

* அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் புகழ்மங்காது ஒளிவீசிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post பிறந்தநாளையொட்டி அழகு முத்துக்கோன் படத்துக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை: கட்சி தலைவர்களும் மலர்தூவினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muthukkon ,CM ,BC ,G.K. Stalin ,Maladuvi ,Thirukkon ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் வேப்பூரில் 20 செ.மீ. மழைப்பதிவு!!