×

டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் நாளை நெல்லை-கோவை மோதல்

நெல்லை: நெல்லையில் நேற்று நடந்த டிஎன்பிஎல் 2வது தகுதி சுற்றில் திண்டுக்கல் அணியுடன் மோதி நெல்லை அணி கடைசி ஓவரில் காட்டடி அடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இறுதி போட்டியில் நாளை கோவை அணியுடன் நெல்லை பலப்பரீட்சை நடத்துகிறது.நெல்லை சங்கர்நகர் ஐசிஎல் மைதானத்தில் நேற்று நடந்த 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் நெல்லை, திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. அந்த அணியை சேர்ந்த ஷிவம் சிங் 46 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நெல்லை அணிக்கு அஜிதேஷ் 73 ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 19வது ஓவரில் அவரும், ஈஸ்வரனும் இணைந்து 5 சிக்சர்களை பறக்கவிட்டதோடு, இலக்கை எட்டவும் உதவினர். இதன் மூலம் நெல்லை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெல்லை அணியின் ஈஸ்வரன் ஆட்டம் இழக்காமல் 11 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார். நெல்லையில் நாளை (12ம் தேதி) நடக்கும் இறுதிப் போட்டியில் கோவை அணியை நெல்லை அணி எதிர்கொள்கிறது. இதனால் நெல்லை சுற்றுவட்டார கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

The post டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் நாளை நெல்லை-கோவை மோதல் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Coimbatore ,TNPL ,Nellai ,Dindigul ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...