×

‘எதிரணியில் இருந்தால் காணாமல் போய்விடுவாய்’ வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கு ஜார்கண்ட் கவர்னர் எச்சரிக்கை

கோவை: ஜார்க்கண்ட் மாநில கவர்னராக திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரும், தமிழக பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவருக்கு, கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் பாராட்டு விழா நடந்தது. இவ்விழாவுக்கு, முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, பாரதிய ஜனதா மகளிர் அணி தேசிய செயலாளரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.

இந்த விழாவில், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை ஆற்றும்போது, ஒரு குண்டை தூக்கிப்போட்டார். அதாவது, ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அண்ணனுடன் நீ பயணிக்கும் வரை உனக்கு பிரச்னை இல்லை… நீ, எதிர்அணியில் இருந்தால் காணாமல் போய்விடுவாய்’’ என வானதி சீனிவாசனை பார்த்து பேசினார். இதைக்கேட்டு, வானதி சீனிவாசன் ஒரு கனம் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சுதாரித்துக்கொண்டார். மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாய்விட்டு சிரித்தார்.

விழா முடிந்து மேடையை விட்டு இறங்கிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ‘‘இதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால், நாம் நினைத்த காரியத்தை சாதிக்க முடியும் என்பதால் அப்படி குறிப்பிட்டேன்’’ என வானதி சீனிவாசனிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 9-ல் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. ஒரு தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் வெற்றிபெற்றார். மாவட்டத்தில் எந்த பிரச்னையாக இருந்தாலும் சரி, எஸ்.பி.வேலுமணி தலைமையில் 9 அதிமுக எம்எல்ஏ.க்களும் ஒன்றுசேர்ந்து மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கூட்டாக மனு கொடுக்க செல்வது வழக்கம். அப்படி செல்லும்போது, கூட்டணி கட்சி என்ற முறையில் வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர், செல்வதில்லை. இந்த தகவலை, எஸ்.பி.வேலுமணி, கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளார். இதன் எதிரொலியாக கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் மேடையில் இதை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவரது இந்த பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

The post ‘எதிரணியில் இருந்தால் காணாமல் போய்விடுவாய்’ வானதி சீனிவாசன் எம்எல்ஏவுக்கு ஜார்கண்ட் கவர்னர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Governor ,Vanathi Srinivasan ,MLA ,Coimbatore ,Tirupur ,Tamil Nadu ,Bharatiya Janata Party ,president ,CP Radhakrishnan ,Jharkhand Governor ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...