×

உடுமலை சுற்றுவட்டார பகுதியில் பந்தல் காய்கறி சாகுபடி தீவிரம்

உடுமலை: உடுமலை சுற்று வட்டார பகுதியில் பந்தல் முறையில் பீர்க்கங்காய், பாவக்காய், புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை, தளி, அமராவதி பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட நீண்ட கால பயிர்களையும், காய்கறிகள், தானியங்கள் போன்ற குறுகிய காலப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். குறுகிய காலத்தில் அறுவடைக்கு வருகின்ற காய்கறிகள், கீரைகள் விவசாயிகளுக்கு பெரியளவில் நஷ்டத்தை ஏற்படுத்துவதில்லை. இதன் காரணமாக, சமீப காலமாக விவசாயிகள் பல்வேறு விதமான காய்கறிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் உடுமலை, தளி, அமராவதி பகுதியில் கிணறு, ஆழ்குழாய் கிணறு, திருமூர்த்தி மற்றும் அமராவதி அணையை நீராதாரமாக கொண்டு கத்தரி, அவரை வெண்டை, தர்பூசணி, வெள்ளரி, அவரை, புடலை உள்ளிட்ட காய்கறிகள் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில விவசாயிகள் பந்தல் முறையில் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

பந்தல் முறையில் சாகுபடி செய்வதற்காக முதலில் 5 அடி உயரமுள்ள கற்களை நடவு செய்து அதை ஒன்றுடன் ஒன்றை இணைக்கும் வகையில் கம்பிகளை கொண்டு இணைப்பு ஏற்படுத்த வேண்டும். பின்னர் பீர்க்கன், புடலை, பாகல் உள்ளிட்டவற்றை நடவு செய்து கொடி படர்ந்த பின்பு அதை கயிற்றால் கட்டி பந்தல் போன்ற அமைப்பை ஏற்படுத்துவோம். இந்த முறையில் செடிகள் பராமரிப்பு, உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், களை எடுத்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். காய்களும் நிலத்தில் முட்டாது என்பதால் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். பறிப்பதும் எளிது. பொதுமக்களும் காய்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.

பந்தல் முறையில் விளைந்த காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் விலையும் உள்ளது. இதனால் பந்தல் முறையில் சாகுபடி செய்வதை உற்சாகத்தோடு மேற்கொள்கிறோம். இதற்காக ஒருமுறை முதலீடு செய்தாலே போதுமானது. அதில் ஆண்டுக்கணக்கில் நிலையான பலனை பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post உடுமலை சுற்றுவட்டார பகுதியில் பந்தல் காய்கறி சாகுபடி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Birkangai ,Bhavakai ,Budalangai ,
× RELATED மடத்தூர் சுற்றுவட்டார பகுதியில்...