×

குன்றத்தூர் அருகே சிலம்ப பயிற்சி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கேடயத்துடன் தக்காளி பரிசு

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே நேற்று மாலை சிலம்பப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம், பட்டய சான்றுடன் தக்காளி பரிசாக வழங்கப்பட்டது. குன்றத்தூர் அருகே மேத்தா நகர், 12வது கிழக்கு தெருவில் நேற்று மாலை சிலம்பம், வர்மக்கலை மற்றும் அடிமுறை கலைகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கேடயம், பட்டய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மணிமங்கலம் காவல் சரக உதவி ஆணையர் ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சிலம்பாட்டம், சுருள் வாள்வீச்சு, மான்கொம்பு சுற்றுதல், யோகா, அடிமுறை போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை பொதுமக்களின் முன்னிலையில் விளையாடி அசத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ரித்திகா என்ற மாணவி 2 கைகளில் இருந்த சிலம்பக் குச்சியில் தீப்பந்தம் ஏற்றி இடைவிடாமல் கம்பு சுற்றியது அனைவரையும் சிலிர்க்க வைத்தது. இதைத் தொடர்ந்து, சிலம்பப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு உதவி ஆணையர் ரவி கேடயம், பட்டய சான்றிதழுடன் காஸ்ட்லி தக்காளிகளை வழங்கி பாராட்டினார். பின்னர் உதவி ஆணையர் ரவி பேசுகையில், முன்பெல்லாம் இளைஞர்கள் கராத்தே, குங்பூ போன்ற வெளிநாட்டு தற்காப்பு கலைகளை கற்றனர். தற்போது மாணவ-மாணவிகளிடையே சிலம்பம், வர்மக்கலை, மான் கராத்தே, சுருள் வாள்வீச்சு போன்ற பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டுகளை கற்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதில் சிறந்து விளங்கும் வீரர்கள் ஒழுக்கத்துடன் இருப்பர். நீங்கள் அனைவரும் விளையாட்டு வீரர்களாக மட்டுமின்றி, படிப்பிலும் கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் சிறந்த அதிகாரிகளாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என உதவி ஆணையர் ரவி தெரிவித்தார்.

The post குன்றத்தூர் அருகே சிலம்ப பயிற்சி தேர்ச்சி பெற்றவர்களுக்கு கேடயத்துடன் தக்காளி பரிசு appeared first on Dinakaran.

Tags : Silamba ,Kunradhur ,Kunradthur ,Cilamba ,
× RELATED கடன் பிரச்னை காரணமாக டிராவல்ஸ் அதிபர் தூக்கிட்டு தற்கொலை