பெரும்புதூர்: பென்னலூர் ஊராட்சியில் ஒரு தனியார் நிறுவன தொழிற்சாலை சார்பில், ஏரி வரவு கால்வாயை ஆக்கிரமித்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை தடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 300 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பி, பென்னலூர் சாலை கால்வாய் வழியாக, பெரும்புதூர்-குன்றத்தூர் சாலையை ஒட்டியுள்ள செம்பரம்பாக்கம் வரத்து கால்வாயை சென்று அடையும். பின்னர், அந்த கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் சென்றடைந்து வருகிறது.
இதற்கிடையே பென்னலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ஏரி வரவு கால்வாயை ஆக்கிரமித்து, ஒரு தனியார் நிறுவன தொழிற்சாலை கட்டப்பட்டு வருகிறது. மேலும், அந்த கால்வாயை உடைத்து, அதன்மேல் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்துள்ளனர். இதனால் மழைக் காலத்தின்போது ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற வழியின்றி, அப்பகுதி குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துவிடும் அபாயநிலை உள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவன தொழிற்சாலை நிர்வாகத்திடம் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் முறையிட்டும் செவிசாய்க்கவில்லை. மேலும், இப்பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், ஏரி வரவு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, இப்பிரச்னையில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு, நேரில் ஆய்வு செய்து, அந்த தனியார் நிறுவன தொழிற்சாலையின் ஏரி வரவு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post ஏரிக்கு தண்ணீர் வரும் கால்வாயை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு: கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பென்னலூர் கிராம மக்கள் கலெக்டருக்கு வலியுறுத்தல் appeared first on Dinakaran.