சித்தூர் : விடுமுறை தினமான நேற்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அவ்வாறு பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள உண்டியலில் தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் எப்போதுமில்லாத அளவிற்கு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதனால், 6 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாத வகையில் வரிசையில் மோர், குடிநீர், குளிர்பானம் உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. அதேபோல், பக்தர்களின் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கோயில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post விடுமுறை தினமான நேற்று காணிப்பாக்கம் கோயிலில் பக்தர்கள் 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.