×

நித்திரவிளை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாயில் கொட்டப்பட்ட செப்டிக் டேங்க் கழிவுகள்

*சுகாதார சீர்கேடால் பொதுமக்கள் அவதி

நித்திரவிளை, ஜூலை 10: நித்திரவிளை அருகே மங்காடு ஊராட்சிக்குட்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனத்தில் வந்து கொட்டி சென்றுள்ளனர்.
நெய்யார் இடதுகரை கால்வாயில் கேரளாவில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டிருந்தாலும், மழைக்காலங்களில் மழைநீர் வடிந்து செல்லவும், மானாவாரி குளங்களில் மழைக் காலங்களில் தண்ணீர் மறுகால் பாயும் போது வடிந்து செல்லவும், நிலத்தடி நீர்மட்டம் உயர வேண்டியும், சானல் குறுக்கே பல பகுதிகளில் தடுப்பணை அமைத்து, சானல் செல்லும் பகுதிகளின் எல்லைக்குட்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் பராமரிப்பு பணிகள் செய்து வருகின்றன.

இந்த கால்வாயில் இரவு வேளையில் சமூக விரோதிகள் செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மங்காடு ஊராட்சிக்குட்பட்ட நெய்யாறு இடதுகரை சானலில் நெச்சிமூடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் செப்டிக் டேங்க் கழிவுகளை சமூக விரோதிகள் வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். சமூக விரோதிகள் எதிர்பார்த்தது போல மழை பெய்யாத காரணத்தால் சுமார் 50 மீட்டர் தூரம் சானலில் மனித கழிவுகள் மிதந்த நிலையில் உள்ளன.

இந்த மனித கழிவுகளிலிருந்து வெளியாகும் துர்நாற்றம் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வீசுகிறது. இதனால் வையந்தாள தோட்டம், தொண்டுமூடு, நெடுந்தாணி, புளியங்கண்டம், புல்லாணிவிளை போன்ற பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுகளால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

அதுபோல் இந்த சானல் தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதியான கீழ்கரிக்கல், ஒருபிலாந்தோட்டம், காக்கர்ணம், ஆலவிளை ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு, தனியார் குடிநீர் கிணறுகள் நாசமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி நெய்யாறு இடதுகரை சானலில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி செல்லும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post நித்திரவிளை அருகே நெய்யாறு இடதுகரை கால்வாயில் கொட்டப்பட்ட செப்டிக் டேங்க் கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Neiyaru ,Nithravila ,Nitravilai ,Mangadu ,Nithravilai ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே மர்மமாக இறந்த...