
*நாட்டு மீன்களை அள்ளிச் சென்றனர்
பொன்னமராவதி : புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தில் கண்டனி கண்மாயில மீன் பிடி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின், கோடைகாலத்தில் மீன்பிடி திருவிழா களை கட்டுவது வழக்கம். இதன்படி கடந்த மூன்று மாதங்களாக பொன்னமராவதி பகுதிகளில் கிராமங்கள் வாரியாக மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று, பொன்னமராவதி அருகே உள்ள கருப்புகுடிபட்டி கிராமத்தின் கண்டனி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்று, வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை வீசி, திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதையடுத்து ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். இதில் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன் வகைகள் கிடைத்தன. அவற்றை மக்கள், மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.
The post புதுக்கோட்டை அருகே மீன்பிடி திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.