×

காசிமேட்டில் மீன்களின் வரத்து அதிகரிப்பு மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1250 வவ்வால் ரூ.800

சென்னை: காசிமேட்டில் மீன்களின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதேபோல, மீன்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும், அசைவ பிரியர்கள் அவற்றை வாங்கி சென்றனர். சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காசிமேடு பகுதியில் கொண்டு வரப்படும் மீன்கள் பிரஷ்ஷாகவும், சுவையாகவும் உள்ளது. இதை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பெரிய, சிறிய வியாபாரிகள், அசைவ பிரியர்கள் வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதியது.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிந்துவிடுவார்கள். அதிகாலை 2 மணி அளவில் மீன்களின் ஏலம் தொடங்கும். மீன் விற்பனையில் பெரிய, சிறிய சுற்றுவட்டார வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொள்வர். அந்தவகையில் நேற்று வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை வாங்க குவிந்தனர். விசைப்படகுகளின் அதிகப்படியான வரத்தால் கூடுதல் மீன்கள் விற்பனைக்கு வந்தபோதிலும் மீன்களின் விலை உயர்ந்தே காணப்பட்டது.

விலை உயர்வாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்த மீன்களை அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். 1 கிலோ வஞ்சிரம் ரூ.1250க்கும், சங்கரா ரூ.750க்கும், வவ்வால் ரூ.800க்கும், இறால் ரூ.600க்கும், நண்டு ரூ.600க்கும், கிழங்கான் ரூ.450க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் ஆடி மாதம் பிறக்க இருப்பதால், அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மீன்களின் விலை உயரக்கூடலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

The post காசிமேட்டில் மீன்களின் வரத்து அதிகரிப்பு மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்: ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1250 வவ்வால் ரூ.800 appeared first on Dinakaran.

Tags : Kasimat ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...