×

பாஜ ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் கையெழுத்திடுவதுதான் ஆளுநர் வேலை: சீமான் பேட்டி

காரைக்குடி: ‘தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம். ஆளுநர் வேலை கையெழுத்திடுவதுதான்’ என்று சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒன்றிய அரசுக்கு மக்கள் நலன் சார்ந்த சட்ட திட்டங்களை கொண்டு வருவதற்கு தெரியவில்லை. அதனால் மக்கள் மத்தியில் அந்த ஆட்சியின் மீது வெறுப்பு உள்ளது. அதனை திசை திருப்ப பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இந்த சட்டம் தேவையற்றது.

இருக்கும் சட்டமே அனைவருக்கும் சமமாக இல்லை. பிறகு எதற்கு பொது சிவில் சட்டம். மணிப்பூரில் கலவரத்தை நடத்துவதே ஒன்றிய அரசுதான். மலை மேல் வசிப்பவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சி வாக்காளர்கள் என்பதால், அவர்கள் சாக வேண்டும் என நினைக்கின்றனர். ஆளுநர் என்ற பொறுப்பே அவசியமற்றது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குதான் அதிகாரம். ஆளுநர் என்பவர் நியமன உறுப்பினர். அரசு மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், சட்டங்களை கொண்டு வந்தால் அதனை ஆமோதித்து கையெழுத்து போடுவதுதான் அவரது வேலை. இதற்கு முன்னால் இருந்த ஆளுநர்கள் எல்லாம் அப்படிதான் இருந்தனர்.

பாஜ ஆளாத மாநிலங்களில் இதுபோன்ற ஆட்களை கொண்டு ஒரு குழப்பத்தை செய்து கொண்டு இருக்க வேண்டும் என செயல்படுகின்றனர். ஆந்திரா, புதுச்சேரியில் இதுபோன்று செய்தனர். கடந்த காலங்களில் அப்போதைய முதல்வர் நாராயணசாமியை என்ன பாடுபடுத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் ராகுல்காந்தி. அவரை தகுதி நீக்கம் செய்ய இவர்கள் யார்? ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்கள் ஆட்சிக்கு எதிரானது. இவ்வாறு கூறினார்.

* அண்ணாமலைக்கும் ஆளுநருக்கும் போட்டி
சீமான் கூறுகையில், ‘‘அண்ணாமலை பேச வேண்டியதை எல்லாம் ஆளுநர் பேசி விடுகிறார். அதனால் பாஜவுக்கு இவர் மாநில தலைவரா? அவர் தலைவரா என குழப்பம் வந்து விட்டது. அண்ணாமலையை விட ஆளுநர் பரபரப்பாக பேசுவதால், அவர் ஓவர்டேக் செய்து போகிறார் என நினைத்து ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என கூறுகிறார்’’ என்றார்.

The post பாஜ ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் கையெழுத்திடுவதுதான் ஆளுநர் வேலை: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Baja ,Karawikudi ,Seaman ,Sivagangai District, Karaigudi, Tamil ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...