×

மீன்களின் வரத்து அதிகரிப்பு காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1250க்கு விற்பனை

தண்டையார்பேட்டை: மீன்களின் வரத்து அதிகரித்தபோதிலும் காசிமேடு மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1250க்கு விற்பனை செய்யப்பட்டாலும் அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மீன்வரத்து அதிகரிதுள்ளது. காசிமேடு பகுதியை பொருத்தவரை இங்கு பிடித்து வரப்படும் மீன்கள் பிரஷாகவும், சுவையாகவும் இருப்பதால் இதை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பெரிய, சிறிய வியாபாரிகள், அசைவ பிரியர்கள் வருவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று நள்ளிரவு முதல் காசிமேடு மீன்மார்க்கெட்டில் கூட்டம் அலை மோதியது. ஞாயிற்றுக்கிழமை என்றாலே காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் மீன்களை வாங்க அசைவ பிரியர்கள் குவிவார்கள்.

நள்ளிரவு 2 மணி அளவில் ஏல முறை தொடங்கும். மீன் விற்பனையில் பெரிய, சிறிய சுற்றுவட்டார வியாபாரிகள், பொதுமக்கள் கலந்துகொள்வார்கள். அந்தவகையில் இன்று வியாபாரிகள், பொதுமக்கள் மீன்கள் வாங்ககுவிந்தனர். விசைப்படகுகளின் அதிகப்படியான வரத்தால் கூடுதல் மீன்கள் விற்பனைக்கு வந்தபோதிலும் மீன்களின் விலை உயர்ந்தே காணப்பட்டது. விலை உயர்வாக இருந்தாலும் தங்களுக்கு பிடித்த மீன்களை அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மீன்களின் விலைப்பட்டியல்: ஒரு கிலோ வஞ்சிரம் 1250 ரூபாய்க்கும், சங்கரா 750க்கும், வவ்வால் 800க்கும், இறால் 600க்கும், நண்டு 600க்கும், கிழங்கான் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் ஆடி மாதம் பிறக்க இருப்பதால், அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது மீன்களின் விலை உயரக்கூடலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

The post மீன்களின் வரத்து அதிகரிப்பு காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kasimat ,Vanjaram ,Thandaiyarpet ,Kasimedu ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...