×

150 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம்

விழுப்புரம், ஜூலை 9: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. தென் அகோபிலம் என்று போற்றப்படும் இக்கோயில், கி.பி. 7ம் நூற்றாண்டில் முதலாம் பல்லவ மன்னரால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய 8 நரசிம்மர் கோயிலில் இந்த பூவரசன்குப்பம் கோயில் நடுவில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இக்கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பின் பிரமோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 32 அடி உயரத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து கடந்த 30ம் தேதி பிரமோற்சவம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம், கடந்த 6ம் தேதி நடைபெற்றது. 9ம் நாளான நேற்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, காலை மேளதாளம் முழங்க, லட்சுமி நரசிம்ம பெருமாள் தேருக்குள் எழுந்தருளினார். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் புறப்பட்டது. விழுப்புரம் தொகுதி லட்சுமணன் எம்எல்ஏ தலைமை தாங்கி, தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். திமுக மாநில ஆதிராவிடர் குழு புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியபடி, தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். 4 மாடவீதிகள் வழியாக தேர் சென்று, மீண்டும் நிலையை அடைந்தது.

The post 150 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Lakshmi Narasimha ,Villupuram ,Lakshmi Narasimha Perumal temple ,Poovarasankuppam ,Valavanur ,
× RELATED சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி...