×

சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில் நடந்த லோக் அதாலத் வழக்குகளில் ரூ.9.38 கோடி பைசல்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக 67 வழக்குகளில் தீர்வு எட்டப்பட்டு ரூ.9 கோடியே 38 லட்சத்து 24,963 பைசல் செய்யப்பட்டது. தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவின் சார்பில், நேற்று தமிழ்நாடு முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. சென்னையில் உயர் நீதிமன்ற சட்ட சேவை கமிட்டி சார்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் லோக் அதாலத் நடைபெற்றது. இந்த லோக் அதாலத்தில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான 693 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற சட்ட சேவை செயலாளர் மாவட்ட நீதிபதி கே.சுதா வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று லோக் அதாலத் நடந்தது.

தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழு தலைவர் நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதிகள் முகமது சபீக், சத்தியநாராயண பிரசாத், வி.லட்சுமிநாராயணன், கே.ராஜசேகர், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்திலும், நீதிபதிகள் ஆர்.விஜயகுமார், பி.தனபால் ஆகியோர் மதுரை கிளையிலும் வழக்குகளை விசாரித்தனர். இந்த லோக் அதாலத்தில் அரசு வழக்கறிஞர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் மொத்தம் 67 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு ரூ.9 கோடியே 38 லட்சத்து 24,963 பைசல் செய்யப்பட்டது.

The post சென்னை ஐகோர்ட், மதுரை கிளையில் நடந்த லோக் அதாலத் வழக்குகளில் ரூ.9.38 கோடி பைசல் appeared first on Dinakaran.

Tags : Crore Faisal ,Lok Adalat ,Chennai High Court ,Madurai Branch ,Chennai ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...