×

பாடாலூர் அருகே ஆலத்தூர் கேட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பாடாலூர் : ஆலத்தூர் கேட் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர்கேட் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் செட்டிகுளம் இணைப்பு சாலையும் கொளக்காநத்தம் செல்லும் இணைப்பு சாலையும் அருகருகே உள்ளது. அதிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம், ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலக பணிகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆலத்தூர் தாலுகாவின் கிழக்கு பகுதியில் உள்ள காரை, தெரணி, கொளக்காநத்தம், கொளத்தூர், அயினாபுரம், இலுப்பைக்குடி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பொது மக்களும், அதே போல் ஆலத்தூர் தாலுகாவில் மேற்கு பகுதியான நாட்டார்மங்கலம், செட்டிகுளம், மாவிலங்கை, சிறுவயலூர், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் பல்வேறு அலுவலக பயன்பாட்டுக்காக நாள்தோறும் ஆலத்தூர் கேட் பகுதிக்கு வந்து தான் செல்ல வேண்டும்.

மேலும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆலத்தூர் கேட் பகுதிக்கு வந்து தான் செல்ல வேண்டும். இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஆலத்தூர்கேட் கிழக்கு பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் திருச்சி செல்லும் சாலையில் நிழற்குடையில் பயணிகள் அமர்ந்து பேருந்துகளில் ஏறி செல்வதற்கான நிழற்குடை இல்லை.

இதனால் பொதுமக்களே தற்காலிக கீற்று கொட்டகையால் நிழற்குடை அமைத்துள்ளனர். மழை காலங்களில் கீற்றால் வேயப்பட்ட நிழற்குடையில் நிற்கும்போது மக்கள் நனையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும். பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாடாலூர் அருகே ஆலத்தூர் கேட்டில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Alatur Gate ,Padalur ,Badalur ,Alathur Gate ,Perambalur ,Dinakaran ,
× RELATED பாடாலூரில் சித்ரா பவுர்ணமியை...