×

திண்டிவனம் அருகே பரபரப்பு கார், லாரி, அரசு பேருந்து, பைக் உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்

திண்டிவனம், ஜூலை 8: திண்டிவனம் அருகே கார், அரசு பேருந்து, பைக், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் எஸ்ஐ உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து சென்னை மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை அதிகளவிலான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே உள்ள கரிக்கம்பட்டு பகுதியில் எதிர்பாராத விதமாக 3 கார், பைக், லாரி, அரசு பேருந்து என அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த வளவனூர் எஸ்ஐ கலியமூர்த்தி(59), வடலூரைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் (50), விழுப்புரத்தை சேர்ந்த ஞானவேல் மனைவி பொன்னி(46), ஆரியபூதம் மகன் நாகப்பன்(51), ராமச்சந்திரன் மகன் சிவபாதம்(57), பண்ருட்டி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் பலராமன்(60), வைரபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள்(36), அவரது மனைவி ரமணி(30), கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த சின்னதுரை மனைவி தையல்நாயகி(47) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதி கொண்டதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post திண்டிவனம் அருகே பரபரப்பு கார், லாரி, அரசு பேருந்து, பைக் உள்பட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் appeared first on Dinakaran.

Tags : Thindivanam ,Tindivanam ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது