பரமக்குடி, ஜூலை 8: விதைப்பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி மற்றும் வேளாண்மை அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் நெல் விதைகளை விற்பனை நிலையங்களில் வாங்கும் போது விதை சான்று பெற்ற விதைகளை வாங்க வேண்டும். விதை சான்று என்பது உற்பத்தியாளர்கள், விதை உற்பத்தி செய்வதை விதைச்சான்று துறையினர் கண்காணித்து விதைப் பரிசோதனையில் முளைப்புத்திறன், ஈரப்பதம், புறத்தூய்மை மற்றும் பிற ரக கலவன் ஆகிய விதைத்தரங்களில் தேர்ச்சி பெற்ற பின்னரே நீல நிறம், வெள்ளை நிறம் மற்றும் பச்சை நிறங்களில் விவர அட்டை பொருத்தப்பட்டு விதை விநியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பயிருக்கும் விதைச்சட்டம் 1966 பிரிவு 7(பி)ன் படி குறைந்தபட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தரமான சான்று பெற்ற நெல்விதை என்றால் சுத்த தன்மை 98 சதவீதம் குறைந்த பட்ச முளைப்புத்திறன், 80 சதவீதம் அதிக பட்ச ஈரப்பதம், நெல்லுக்கு 13 சதவீதம் மற்றும் பிற ரக கலவன் 0.02 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் போது சான்றட்டை மற்றும் உற்பத்தியாளர் விவர அட்டைகளில் உள்ள விதை காலாவதியாகும் நாள் அறிந்து வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
The post சான்று பெற்ற விதைகளை விதைக்க ஆலோசனை appeared first on Dinakaran.