×

மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்கு தள்ளும் ‘நெக்ஸ்ட்’ தேர்வை கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை: மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்கு தள்ளும் நெக்ஸ்ட் தேர்வை கைவிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்த, தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும் என்றும், மே மற்றும் நவம்பர் மாதங்களில் இரு தேர்வுகளாக நடக்கும் எனவும், வரும் ஜூலை 28ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாகவும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

கல்வியில் நீட் தேர்வு மூலம் மாநில உரிமையை பறித்ததுபோல், தற்போது ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வு மூலமும், அனைத்து இடங்களுக்குமான ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மூலமும் மாநில உரிமையை பறிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய பா.ஜ.க அரசு தொடங்கியுள்ளது கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கெனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வானது தமிழகத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், பள்ளிக்கல்வி அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு முறை, மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தும். மருத்துவ படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்க செய்து, மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்கு தள்ளும் நெக்ஸ்ட், மருத்துவ தகுதித் தேர்வு நடத்தும் முடிவை கைவிட வேண்டும்.

The post மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்கு தள்ளும் ‘நெக்ஸ்ட்’ தேர்வை கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vigo ,Chennai ,Vaiko ,Secretary General ,Madimuga ,
× RELATED நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பச்சைத் துரோகம்: வைகோ கண்டனம்