×

நடத்தையில் சந்தேகப்பட்டு பெல்டால் கழுத்தை இறுக்கி மனைவி கொடூர கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: மாங்காடு அடுத்த கொளப்பாக்கம், வன்னியர் தெருவை சேர்ந்தவர் தனஞ்செழியன் (37). இவர் அதே பகுதியில் பெயின்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி அம்பிகா (28) என்ற மனைவியும் சர்வேஷ் பிரணவன் (13) என்ற மகனும், யாழிசை (11) என்ற மகளும் உள்ளனர். இருவரும் கொளப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பிள்ளைகள் இருவரும் தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்து, தங்களது உறவினர்களை உதவிக்கு அழைத்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு, அம்பிகா கழுத்தில் பெல்டால் இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதன் அருகிலேயே தனஞ்செழியனும் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து, உடனடியாக மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையிலான போலீசார், இறந்த கணவன், மனைவியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களாக அம்பிகா வேறு யாருடனோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தனஞ்செழியன் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலையும் அது போலவே இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தனஞ்செழியன் மனைவியை தனது பெல்டால் அடித்து, உதைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி இறந்ததும், போலீசாரின் வழக்கு விசாரணைக்கு பயந்து தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நடத்தையில் சந்தேகப்பட்டு பெல்டால் கழுத்தை இறுக்கி மனைவி கொடூர கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Thananjezhiyan ,Vanniyar Street, Kolappakkam ,Mangadu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...