×

தேனிலவுக்கு சென்ற தம்பி: அறைக்கு தீ வைத்த அண்ணன்: சொகுசு ரூம் பஞ்சாயத்தால் ரெண்டான குடும்பம்

குலசேகரம்: குமரி மாவட்டம் திருவட்டார் அருகே சொகுசு வசதி கொண்ட அறையில் தங்கி இருந்த அண்ணனுக்கும், தேனிலவு கொண்டாட நினைத்த புதுமாப்பிள்ளைக்கும் யார் அந்த அறையில் தங்குவது என தகராறு ஏற்பட்டது. இதில் அந்த அறையில் இருந்த பொருட்களை அண்ணன் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது. அவர்களது வீட்டில் விசாலமான வசதி கொண்ட ஒரு அறை இருக்கிறது. மூத்த மகன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொகுசு வசதி கொண்ட அந்த அறையில் தங்கி இருந்தார்.

ஆனால் அந்த அறை மீது 2வது மகனுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்து தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் அந்த சொகுசு அறைக்கு உரிமை கோரினார். ஆனால் அண்ணன் கொடுக்கவில்லை. தினமும் அந்த அறையை முதலில் பிடிப்பது யார்? என்ற போட்டியே நடக்குமாம். அண்ணன் முதலில் அறையை பிடித்து விட்டால் அன்று இரவு அங்கேயே தூங்கி விடுவார். தம்பி அறைக்கு வந்தாலும் அங்கிருந்து நகருவது இல்லை. இப்படியே 3 நாட்கள் கழிந்தது. ஆனாலும் பிரச்னை முடிந்தபாடில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் புதுமாப்பிள்ளை சாப்பிட்டு முடித்த கையோடு அண்ணனின் அறைக்கு சென்று செட்டில் ஆகி விட்டார். அண்ணன் இதை தட்டிகேட்டு உள்ளார். ‘நான் தான் முதலில் குடும்பத்துடன் இந்த அறையில் தங்கினேன். எனவே இந்த அறை எனக்கு தான் சொந்தம்’ என்று வாதிட்டு உள்ளார். ஆனால் புதுமாப்பிள்ளையோ, ‘இந்த அறை பொதுவானது. புதிதாக திருமணம் ஆகிய நான்தான் அறையில் தேனிலவு கொண்டாடுவேன்’ என்று அடம் பிடித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த அண்ணன்அறை முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் அங்கிருந்த கட்டில், மேஜை, விலை உயர்ந்த பொருட்கள் தீயில் கொழுந்துவிட்டு எரிந்தது. இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தேனிலவுக்கு சென்ற தம்பி: அறைக்கு தீ வைத்த அண்ணன்: சொகுசு ரூம் பஞ்சாயத்தால் ரெண்டான குடும்பம் appeared first on Dinakaran.

Tags : Kulasekaram ,Tiruvattar, Kumari district ,
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...