×

போதிய விலை போகாததால் பருத்தி செடிகளை அழிக்கும் விவசாயிகள்

*கொள்ளிடம் பகுதியில் அவலம்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் சில பகுதிகளில் பருத்தி பயிரை விவசாயிகள் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட எக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் பருத்தி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். பருத்தி பயர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக அறுவடை பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள பருத்தி பஞ்சை ஏருக்கூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோன் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பருத்தி பஞ்சு சென்ற வருடத்தைவிட இந்த வருடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. சென்ற வருடம் கொள்ளிடம் வட்டாரத்தில் பருத்தி பயிர் சாகுபடி சுமார் 2000 எக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்தது. ஆனால் விலை ஒரு கிலோ பருத்தி பஞ்சுரூ 110 முதல் 120 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் பருத்தி பயிர் சாகுபடி செய்த நிலப்பரப்பு 5000 க்கும் மேற்பட்ட எக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பருத்தி பஞ்சின் விலை கிலோ ஒன்று ரூ.60 முதல் 80 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், இந்த வருடம் சில தினங்களுக்கு முன்பு திடீரென மழை பெய்ததால் பருத்தி அறுவடை பாதிக்கப்பட்டவுடன் பருத்தி பஞ்சும் மழையில் நனைந்து தரம் குன்றியது. இதனால் பருத்தி அறுவடை பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பருத்தி சாகுபடி செய்துள்ள சில இடங்களில் விவசாயிகள் தானே முன்வந்து பருத்தி பயிரை மாடுகளை விட்டு அழித்து வருகின்றனர்.

இன்னும் சில வாரங்கள தொடர்ந்து அறுவடை செய்வதற்கு பருத்தி இருந்தும் இயற்கை சூழ்நிலை மழையின் காரணமாகவும், விலை குறைந்துள்ளதன் காரணமாகவும், சம்பா நெற் பயிர் சாகுபடி பணியை துரிதமாக தொடங்குவதை கருதியும் சில பகுதிகளில் மட்டும் பருத்தி பயிரை மாடுகளை மேய விட்டு அழித்து வருகிறனர்.
கொள்ளிடம் அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள பருத்திப்பயிரை அறுவடைக்கு, முன்னதாகவே மாடுகளை விட்டு மேயச் செய்து அழிக்கும் முயற்சியில் பருத்தி விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

The post போதிய விலை போகாததால் பருத்தி செடிகளை அழிக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Avalam Kollidam ,Kollidam ,Dinakaran ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி