×

ரயில் நிலையத்தில் அட்டகாசம் 3 மாணவர்கள் கைது: பட்டாக்கத்திகள் பறிமுதல்

திருவொற்றியூர்: விம்கோநகர் ரயில் நிலையத்தில் மாணவர்கள் கடும் மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில், 3 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டைக்குச் சென்ற புறநகர் ரயிலில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் விம்கோநகர் ரயில் நிலையத்தில் இரு தரப்பைப் சேர்ந்த மாணவர்களும் ஒருவரை ஒருவர் பட்டாகத்தி மற்றும் பாட்டில்களால் தாக்கிக் கொண்டனர். இதில் ரயில் பெட்டியின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

பயணிகள் அலறியடித்து ஓடினர். இதனைத் தொடர்ந்து ரயில் கத்திவாக்கம் ரயில் நிலையத்தில் நின்றதும் மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் ரயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் பெட்டியில் இருந்த ஒரு குழந்தை மற்றும் 2 பெண்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பாதுகாப்பு படை டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மாணவர்களை தேடி வருகின்றனர். இதில், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த மாநிலக் கல்லூரியில் எம்ஏ பொருளாதாரம் 2ம் ஆண்டு படிக்கும் சர்வேஸ்வரன் (22), பிஎஸ்சி இறுதி ஆண்டு படிக்கும் கிரிதரன் (19), பிகாம் 2ம் ஆண்டு படிக்கும் மவுலீஸ்வரன் (18) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post ரயில் நிலையத்தில் அட்டகாசம் 3 மாணவர்கள் கைது: பட்டாக்கத்திகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Attakasam ,Tiruvottiyur ,Vimkonagar ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்