×

தீப்பிடித்து எரிந்த தனியார் கம்பெனி வேன்

பெரும்புதூர்: தர்காஸ் பகுதியில் தனியார் கம்பெனி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்து எலும்பு கூடானதால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (37). பெரும்புதூரில் தனியார் கம்பெனியில், ஊழியர்களை ஏற்றிச்செல்லும் மினிவேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மினி வேனில் பழுது ஏற்பட்டதால், சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியில் சர்வீஸ் சென்டரில் வாகனத்தை விட்டுள்ளார். பின்னர், வேனில் ஏற்பட்ட பழுதை நீக்கிக்கொண்டு, தாம்பரம் – சோமங்கலம் சாலையில் தாம்பரம் நோக்கி வாகனத்தை நேற்று ஓட்டிச் சென்றுள்ளார்.

அப்போது, தர்காஸ் பகுதியை கடக்கும்போது, வாகனத்தின் முன்பகுதியில் திடீரென கரும் புகையோடு தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இதனைகண்ட டிரைவர் பார்த்திபன் சூதாரித்துக்கொண்டு வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு வெளியேறினார். பின்னர், இதுகுறித்து உடனடியாக சோமங்கலம் காவல் நிலையத்திற்கும், தாம்பரம் தீயணைப்பு படை வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், மினிவேன் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. மேலும் சோமங்கலம் போலீசார், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தீப்பிடித்து எரிந்த தனியார் கம்பெனி வேன் appeared first on Dinakaran.

Tags : Perumputhur ,Targas ,Chennai ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு