×

வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நிலம் கையகப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நிலம் கையகப்படுத்தும் பணிகளை, துரிதப்படுத்திட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரயில் நிலையங்கள் அமைந்துள்ளது. இதில், வேப்பம்பட்டு ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, தினமும், ஆயிரக்கணக்கானோர் வேலைக்கும் மருத்துவ சிகிச்சைக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்பவர்கள் இதை கடந்து சென்று வருகின்றனர். இந்த ரயில் தண்டவாளம் வழியாக நாள்தோறும் 250க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2011ம் ஆண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், புதிய மேம்பால கட்டுமானப் பணிக்கு மட்டும் ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது. இதில், 15 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு துவங்கிய பணிகள் நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், பாலம் இறங்கும் பகுதியை மாற்றி அமைக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன் பேரில், இடம் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 10 மாதங்கள் கழித்து, 12.3.2012ம் தேதி, வல்லுநர் குழுவினர் நிராகரித்த, ஒன்றாவது எல்லையில் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டது.

இதனால், வேப்பம்பட்டு ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள மற்றொரு ரயில்வே கேட்டை கடந்துதான் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் செல்ல வேண்டியிருந்தது. இந்த வழக்கில் கடந்த 2021 டிசம்பரில் நீதிமன்றம் மீண்டும் ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்க உத்தரவிட்டது. ஆனால், பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. அதேபோல், செவ்வாப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகே ரயில்வே கேட் உள்ளது. இங்கு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 2011ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பாலம் கட்டும் பணி அதே ஆண்டு துவக்கப்பட்டதால் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், ஆட்டோவில் செல்பவர்கள் கடந்து சென்றனர். ஆனால், தற்போது அந்த சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில், பாம்பு போன்ற விஷ பூச்சிகளும் இருப்பதால் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொது மக்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், வேப்பம்பட்டு மற்றும் செவ்வாப்பேட்டை ரயில்வே மேம்பாலப்பணிகள் விரைந்து மேற்கொள்ள நிலம் கையகப்படுத்துதல் பணிகளை துரிதப்படுத்தி, மேம்பால கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்ததிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வேப்பம்பட்டு, செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நிலம் கையகப்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vepampatu ,Sewwaipet ,Tamil Nadu government ,Thiruvallur ,Veppampattu ,Sewvapettai ,Tiruvallur ,Sewvaipet ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...