
திருத்தணி: மத்தூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இதை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். திருத்தணி ஒன்றியம் மத்தூர் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலானதால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்து காணப்பட்டது. இதில், சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனை அடுத்து, சேதமடைந்த மத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. மேலும், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட இந்த வகுப்பறை கட்டிடத்தின் திறப்பு விழா நேற்றுமுன்தினம் மாலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில், திருத்தணி எம்எல்ஏ சந்திரன், மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேலு. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திர பாபு, சந்தானம், உதவி செயற்பொறியாளர்கள் சுமதி, ஒன்றிய பொறியாளர் ஞானசேகர், ஒப்பந்ததாரர் கமலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post மத்தூர் ஊராட்சியில் ரூ.28 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.