×

ஓடும் பிஆர்டிசி பேருந்தில் சக்கர நட்டுகள் கழன்ற அவலம்: காரைக்காலில் அதிர்ச்சி சம்பவம்

புதுச்சேரி: காரைக்காலில் ஓடும் பிஆர்டிசி பேருந்தில் சக்கர நட்டுகள் கழன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுதொடர்பாக அமைச்சருக்கு பயணிகள் மனு அளித்துள்ளனர். புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் காரைக்கால் பிராந்திய பொதுமக்கள் மற்றும் பயணிகள், சமூக ஆர்வலர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்காலில் இருந்து அம்பகரத்தூர் வரை செல்லும் பிஆர்டிசி அரசு பேருந்து நேற்றிரவு 8:45க்கு திருநள்ளாறு தொகுதி சேத்தூர் பகுதியை கடக்கும்பொழுது வாகனத்தில் வலதுபுறம் இருந்த முன் சக்கர நட்டுகள் தானாக கழன்று கீழே விழுந்து விட்டன.

சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்தி பல பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு பரிசோதிக்கும்பொழுது வலதுபக்கம் உள்ள சக்கரத்தில் நட்டுகள் இல்லாததை கவனித்தார். இந்த நிலை போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய ஒரு அவமானம். பயணிகளை அழைத்து செல்லும் பேருந்துகள் பணிமனையில் வேலை செய்யும் பொழுது ஊழியர்கள் கவனக்குறைவாக இருந்ததாகவும், ஆகையால் டயரை கழட்டி மாட்டும் பொழுது நட்டுகளை டைட் செய்யாமல் விட்டு விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே இத்தகவலை கவனத்தில் எடுத்து போக்குவரத்து துறை அமைச்சர், இந்த வண்டியை சீர் செய்த மெக்கானிக் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த மேற்பார்வையாளர் மட்டுமின்றி இந்த வண்டியை பரிசோதனை செய்த பரிசோதகர் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். பொதுமக்கள் உயிரோடு விளையாட வேண்டாம். வாகனங்களை தயவு செய்து பரிசோதனை செய்யுங்கள். தரமாக இல்லாத வாகனத்தை நிறுத்தி விடுங்கள். தனியார் வாகனத்தையும் சோதனை செய்யுங்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

The post ஓடும் பிஆர்டிசி பேருந்தில் சக்கர நட்டுகள் கழன்ற அவலம்: காரைக்காலில் அதிர்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Karichakal Puducherry ,Karaikal ,BRTC ,Karahikal ,Dinakaran ,
× RELATED காரைக்கால் ராணுவ வீரர் காஷ்மீரில்...